நாட்டுக்கூத்து மரபும் மெலிஞ்சிமுனை கிராமமும்
முத்தமிழின்
மூன்றாம் அங்கமாக விளங்குவது நாடகத்தமிழாகும்
சிலப்பதிகாரத்தை முத்தமிழ் காப்பியமாக
கொள்ளலாம். இளங்கோவடிகள் கூத்து பற்றிய சிறப்பியல்களை அழகாக
தமிழுலகிற்க்கு எடுத்துக்கூறியுள்ளார்.
உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தி,
சீவராசிகள் அனைத்தையும் உலகமாகிய அரங்கினில் நடிக்கும்படி
செய்கின்ற கூத்தாட்டினுடைய நடராஜப்பெருமானே நாடகக்
கூத்தெனும் பொருளுற.
’ஆடகமன்றினுடாக கூத்தனை
நாடியுரைக்குது நாடகவியலே”
என ஆடற்கலை அரசனான
சிவபெருமானை நாடக கூத்தெனும் பொருள்பட உரைக்குப்படுவதை பாடல்
வழியாக நோக்கலாம்.ஈழத்தமிழரின் மரபு வழி
பண்பாட்டின்
பாரம்பரியக்கலையாக கூத்துக்கள் திகழ்கின்றன.
தனித்தேசியத்தன்மை வாய்ந்த கலையாக கிராமிய மக்களின்
இரத்தத்துடன் ஊறி சிறப்புற வளர்ந்து
நாட்டுக்கூத்தெனபரிணாமிக்கிறது.


கூத்துக்கலை பல மூலவடிவில்,பல பெயர்களில் பிரதேசத்திற்கு
பிரதேசம் வேறுபட்ட போதும் மரபு வழி நாடகங்களாக தென்மோடிக்
கூத்து என வெவ்வெறு கூறுகளுடைய பிரிவாக உயிர்த்துடிப்புடன்
பேணப்பட்டு வருகிறது. குறிப்பாக
தென்மோடிக்கூத்துக்கள் கத்தோலிக்க மரபை உள்ளடக்கி
செழுமை மிகு பாடல்களுடன் ஆடி நடிக்கப்படுவதாகவும்
வடமோடிக்கூத்துக்கள் இந்து மதம் சார்ந்த பாரம்பாரியம் மிக்கதாகவும் ஆடல் மிகு
தனித்துவத்துடனும் பேணப்பட்டு வருகிறது. இதனை அருட்திரு கிருபானந்த அடிகளார்
நீண்ட காலமாக காலணித்துவத்தின்
பயனால் இலங்கை மக்களின் தேசியம், சிங்கள
பௌத்த மேலாண்மைக்கு ஆட்படுத்தப்பட்டு,
அரசியல் பொருண்மியப்பண்பாட்டுத்துறைகளில்
மேலாண்மை பெறத்தொடங்கியமையினால் ஈழத்தமிழரின் தேசியத்தை
அடையாளம் காணும் முயற்ச்சி கூர்மையடைந்து எமது அடையாளத்தை அரசியலில் மட்டும் தேடாமல் பண்பாட்டு
கலைத்தளங்களிலும் பேணல் பட வேண்டும். நவீன
நாகரீக சினிமா மோகத்தினால் எமது
பூர்வீக கலை ஊற்றுக்களை கண்டு
பிடிக்காவிட்டால் எமது போரட்டம் அதன் அர்த்தத்தை இழந்து
விடும். எமது கலைவடிவமான
கூத்தரங்கம் இனம் காணப்பட்டு ஏற்பட்ட வரலாற்று தவறுகள்
திருத்தப்படல் வேண்டுமென கூத்துப்பணி மலரில் அழகாக
விளக்கியுள்ளார்.
1948 இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் 1952ல் தான் நமது பாரம்பரியம் உணரப்பட்டு கலைகளை பேணிக்காக்கவென கலைக்கழகம் உதயமானது. பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் பலர் இதற்காக உழைத்தனர். இதன் வெளிப்பாடாய் கூத்து அண்ணாவிமார்களின் பொற்காலமாய் வெளிப்பட்டது. யாழ்ப்பாணத்தின் தென் திசையில் சப்த தீவுகளுக்கு நாயகமாய் விளங்குவது ஊர்காவற்துறை. அதன்தெற்க்கே வளங்கொளிக்கும் மருத நிலப்பரப்பமைந்த கரம்பொன் நகரும், அருகே நெய்தல் நில மெலிஞ்சிமுனைக் கிராமம் அமைந்திருக்கிறது. அலை கடல் தவழ்ந்து விளையாடும் கரையோரத்தை வளமாய் கொண்டு இருப்பிடத்தை அமைந்திருந்த கிரம மக்கள் தொழில் புரியும் காலம் போக மீதி நேரத்தை பண்பாட்டு கருமங்களிலும், விளையாட்டிலும் கலை நிகழ்விலும் செலவிட்டு வந்தனர்.


சமயமும் அதன் கோட்பாடுகளும் உயிர்நாடியாக
விளங்கியமையினால் கிறிஸ்தவ சமயத்தை பின்னணியாகக்
கொண்ட தென்மோடிக் கூத்தை இக் கிராமம் உழைக்கும் மக்களின்
தேடலின் இருப்பாக்கி பேணிப் பாதுகாத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வரலாற்று
கடப்பாட்டின் மூலவராகவும் பிதாமகனாகவும் கலைக்குரிசில்
நீ.வ. அந்தோனி அண்ணாவியாரின் நாடக ஆற்றுகை,
எழுத்தாக்கமும்,
ஆளுமை மிகு பங்களிப்பும் மக்கள்
கலைஞனாக அவரை இனங்காட்டியது. 1930ம் ஆண்டு தொடங்கி 40 ஆண்டு
காலமாக கூத்துக்கலை மரபின்
ஒளிர்வுக்கு தன்னை அர்ப்பணித்து தனிப்பெரும் கலைச்சுடராய்
விளங்கியமையை பாராட்டி 1969ம் வருடம்
மாசி மாதம் 3ம் திகதி நாடகத்தந்தை கலையரசு கே.சொர்ணலிங்கம்
அவர்களால் பொன்னாடை போர்த்தி
’கலைக்குரிசில்” என்னும் பட்டமளித்து கௌரவித்தமை சான்றாகும். அன்றிலிருந்து மெலிஞ்சிமுனை கலாமன்றம்
’கலைக்குரிசில்” என்னும் பெயரோடு கூத்தரங்க நிகழ்வுகளை
நடத்தி வருகிறது.
கலைக்குரிசில் அவர்களின் கூத்து மரபின் சேவையை ஆய்வு செய்த
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள்
நினைவு மலரில்
‘கலைக்குரிசில் நீ.வ. அந்தோனி அவர்களுடைய
பெயர் ஈழத்து நாட்டு கூத்து வரலாற்றிலே
இடம் பெற வேண்டியதொன்றாகும்' என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கலாநிதி மௌனகுரு அவர்கள் தனது
கட்டுரையில்
'இலங்கையின் வடபகுதி மெலிஞ்சிமுனையில் வாழ்
இப்பெருமகன் ஈழத்து தமிழ் நாடக மரபென்ற
பேர் ஆலமரத்தை தாங்கி நிற்கும் விழுதுகளில் ஒன்று' என
குறிப்பிட்டுள்ளார். கரம்பனூர் பண்டிதர் சோ.தியாகராஜாபிள்ளை அவர்கள்
குறிப்பிடுகையில்
'அந்தக்காலத்தில் மெலிஞ்சிமுனையில்
சோடனை என்றாலே மக்களின் படையெடுப்பாகவே இருக்கும்.யாழ்ப்பாண மண் முழுவதும் வந்து
நிறையும்' பிரபல அண்ணாவிமார்களான பொன்னுத்துரை,
பூந்தான்
யோசேப்பு, சில்லாலை
லூயிஸ்,சவிரிமுத்து, நாரந்தனை
அருளப்பு முதலியோர் நமது கலைக்குரிசில் அண்ணாவியார் அருகே வந்து நிற்பார்கள் என புகழாரம
சூட்டியுள்ளனர்.
கலைக்குருசில் தாம் வாழ்ந்த கரம்பொன் தவிர்ந்த பல இடங்களில்
குறிப்பாக யாழ்ப்பாணம்,பருத்தித்துறை,மாதகல், மன்னார்,
முல்லைத்தீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு
எழுவைதீவு, பருத்தித்தீவு
ஆகிய பகுதிகளில் தாம் இயற்றிய
நாட்டுக்கூத்துக்களை மரபு தவறாமல் பாடி, நடித்து, பழக்கிக்கொடுக்கும்
விற்பனராக விளங்கினார். நான்கு தலை முறை கொண்ட
நூற்றுக்கு
மேற்பட்ட கலைஞர்கள் இவரின் காலத்தில்
உருவாக்கப்பட்டுள்ளனர். இம்மண்ணின் வரலாற்றில்
குரல்வளத்தாலும், பண்பட்ட நடிப்பாலும் முத்திரை பதித்த
ஆரம்ப கால தலைமுறைக்கலைஞர்களை குறிப்பிடுவது
சாலப்பொருத்தமானது. தீயோகு, மோசேஸ், வலோரியான்
யாக்கோப்பர், அவுறார், சலமோன், இன்னாசி, அதிரியார்,
பத்தினார், சந்தியாகு, மனேச்சர் சூசை, ம.மனவல்,
நீக்கிலான், அருளப்பர், இசுதோர், கா.மனுவல், பபூன் பாவிலு,
பி.பேதுறு, ம.அந்தோனி, ச.சூசை, பிரகாசம், பேதுறு
மனவல், மனேச்சார் ம.வைத்தியார், தீ.பிரகாசம், அ.வைத்தியார்,
இ.மத்தியாஸ், சு.வைத்தியார், அ.லுக்கேஸ்,
அ.மடுத்தீஸ், செபமாலை, சுவக்கீன், பாலந்தை அந்தோனி என
உருவாக்கப்பட்ட பெருமைமிகு கலைஞர்களின்
பட்டியல் நீண்டு போவதால் அடுத்த தலைமுறை கலைஞர்களை பிறிதொரு
சமயம் குறிப்பிடலாம்.

இவரின் மறைவுக்குப்பின் இக்கலைப்பணியை அவரின் புதல்வர் சவரிமுத்து அண்ணாவியாரும் தி.ம அலெக்ஸாந்தர் அண்ணாவியாரும் நீ.தானியேல் அவர்களும் பாதுகாத்து வந்துள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரில் திரு.அ.ஜேசுதாசனும் திரு.அ.ஜோன்சனும் பல கூத்துக்களை மேடையேற்றியுள்ளனர். இக்கிராமத்தின் பெருமை மிகு மிருதங்க வித்துவானாக திரு.கி.சவரிமுத்து அவர்களும் அவருடன் இணைந்து திரு.சைமன் அவர்களும் மிருதங்க இசையூட்டி இன்னும் திகழ்கின்றனர்.
கிராம மக்களால் ஆனந்தசீலன்கூத்து மேடையேற்ற நிகழ்வில் யாழ்-அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதி மற்றும் யாழ்-மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்களினாலும் முறையே அண்ணாவியார் அந்தோனி-சவரிமுத்து அவர்களுக்கு ‘கலைத்தென்றல்" என்னும் பட்டமும் மிருதங்க ஆசிரியர் கி.சவிரிமுத்து அவர்களுக்கு ‘கலைநாதச்சுடர்" எனும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இம்மண்ணிலிருந்து நோர்வே, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் அங்கும் மண்வாசனைக்கலையை தடம் பதித்து வருகின்றனர். நோர்வே நாட்டின் ஓலசுண்டு நகரில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் விழாவிலும், 1999ல் பேர்கன் நகரில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிலும், 2000ம் ஆண்டில் நடைபெற்ற உதவும் கரங்கள் 10வது ஆண்டு விழாவிலும் ஒஸ்லோ-ஸ்ரவன்கர் ஆகிய மாநிலங்களிலும் கலைக்குரிசில் கலாமன்ற இளைய தலைமுறையினரால் கலைக்குருசில் அவர்களின் பல நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றப்பட்டன. நோர்வே நாட்டில் இன்றும் பல இளம் முண்ணனிக் கலைஞர்கள் அவர் வழியில் கூத்துக்களை இயற்றியும், நடித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.

தொடர்ந்து நோர்வேயில் 2004ம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சியாக கலைக்குரிசிலின் பேரன் அண்ணாவியார் சவரிமுத்து மிக்கேல்தாஸ் எழுதி நெறிப்படுத்திய ’வீரசுதந்திரம்' எனும் தாயக விடுதலை போராட்டத்தின் சமகால நிகழ்வு கூத்தாக மேடையேறி பலரின் பாராட்டைப்பெற்றது.

மேலும் நோர்வே பேர்கன் சிறுவர் பாடசாலையில் அங்கு பிறந்த பாடசாலை மாணவர்களை வைத்து 07.01.2006 அன்று தாவீது-கோலியாத்து நாட்டுக்கூத்தை பழக்கி மேடையேற்றிய அண்ணாவியார் சவிரிமுத்து அவர்களுக்கு பேர்கன் ஈழத்தமிழர் சங்கத்தால் ’கலைவருணன்' எனும் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.

வட அமெரிக்க கண்டமான கனடாவில் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களின் எழுத்தாக்கம், நெறியாள்கையில் ’சிறுமை' எனும் சமூக சீர்திருத்த கூத்தும், தொடர்ந்து 1996ம் ஆண்டு ரொறெண்டோவில் நடைபெற்ற 6வது உலகத்தமிழர் பண்பாட்டு மகாநாட்டில் ‘கண்ணகி' எனும் தமிழரின் அய்ம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை கூத்தாக எழுதி மேடையேற்றி பாராட்டைப்பெற்றார். கலை காலத்தை வென்றது என்பதற்க்கொப்ப தலைமுறை வாரிசுகளினால் விருட்சமாகி உயிர்த்துடிப்போடும், யதார்த்தத்தோடும் முத்திரை பதித்து கலைக்குரிசில் கலாமன்றத்தினரின் கலைப்பயணம் நெடுந்தொடராகி வளர்ந்து வருவது போற்றத்தகுந்தது.
|
|
சவிரிமுத்து-ஜெயராஜா |


















